கடலின் காதலன்

Thursday, May 3, 2012

சமுத்ர குறிப்புகள்


சாத்தானின் அருள் பெற்றவன்  
ஜெல்லியாய் உறங்கும் ஊமைக்கடலை
நான்காய் மடித்து விழுங்குவான் 
பெருங்காட்டுத் தீயாய் கனற்றும் 
உதரவிதானம் தணிய

தேவதைகளும் கடவுளரும் இறைஞ்சி 
நிற்கும் காலமதில் 
கனவில் நழுவும் சுக்லமென
உணர்ந்தும் உணராமலும் விழும் 
அவன் கண்ணீர் ஒரு துளியில்
கடல் சமைப்பார்

அடிக்கடலில் திமிங்கிலங்களின் முராரி
பிரணவமாய் ஒலிக்க
என் ஜீவரசமும் உப்பும் பிசைந்து 
உயிர் செய்வோம் 
ப்ரம்மம் வெட்கி கவிழ 

சமுத்ரா ஜனனம் 


Saturday, April 7, 2012

ஒன்னியும் புரில

மஞ்சள் துருவேறி குமையும் நிலா
சன்னல் ஆடியில் ஈரமற்ற
வெள்ளொழுக்கு

பிறழ்ந்த வானுக்கு கரையேகும்
படகு தீ சுட்டு உதறும் கையாய்
வீசி போகிறது நிராசையின் கவுச்சி
கொடி

நங்கூரத் தூண்டிலில் செவுள் கிழிய
தொங்குகிறேன் சாலமன் மீனென
சகடைஇட்டு நரம்பு சொடுக்கும் கை
உளுந்து மச்சக் காரியினுடையது

மிருகச்சிரங்கில் வீச்சத்திற்கு துரத்தும்
பெருத்த ஈ யாய் அலைகிறது
சுயமைதூனப் பிசாசு
மோகத்திற்கு உயிர் அழிக்க
கேட்ட கவிஞனின் முறுவல்
மீசை முறுக்கு விரிய.