கடலின் காதலன்

Friday, April 2, 2010

ருத்ராபதி ஆசிரியர்


உன்மத்தம் பீடித்தநிலை இறைதரிசன அணுக்கமென்றே விழைகிறேன் .வாழ்வின் அந்திமகால வாசலிலும் பற்றியும் பற்றா குடுவையுள் ரசத்தன்மை எளிதில் யார்க்கும் வாய்ப்பதில்லை.அந்த பித்து பிடித்த மனிதனோடு கொண்டாடுவதில் நானும் பித்தனாவதில் மகிழ்ச்சியன்றி வேறென்ன?
ருத்ராபதி ஆசிரியர் இறந்தாரெனும் செய்தியின் நிதர்சன வலி இன்னமும் சிறிதளவேனும் ஒட்டிக்கொண்டேயிருக்கிறது .
எனக்கான இறைதேடல் சிற்பங்கள் அறையப்பெற்ற கோயில்களில் இல்லைதானென்றாலும் அதன் சப்த அதிர்வுகள் ,வாத்தியங்களின் ஒலியமைதி , மதில்களுக்கப்பாலேயே தீண்டாமை சாபம் பெற்ற நகரிய இரைச்சல் மாசுகளுக்கென்றே பொழுது போக்கின் தலமாக கோயில்களை நான் தேர்ந்ததில் ஆச்சர்யமொன்றுமில்லை . பார்க்கலாமங்கே ஆசிரியரை ஒற்றைப் பச்சைத்துண்டு என்றோ சால்வைஎன்றோ தெரிய மார்புவரை கட்டிய அவ்வொற்றை ஆடையில் நீறு பட்டையில் தேவாரம் , அருட்பா,அந்தாதியுடன் .
இதென்ன காதேலென்று தெரிவதில்லை முழுமூச்சாய் பாடலை மனனம் செய்து சிலைமுன் மன்னிக்க கடவுள் முன் கொட்டித்தீர்த்தல் .இதுவென்ன? என்னிடமும் புத்தகத்தோடு சரிபார்க்க சொல்லி ஒப்புவித்தாலும் கிடைக்கப்பெறும் அதிசயம் !. அவரோடான நட்பியம் எழுத்தென்ற
புள்ளியில் தான் நிகழப்பட்டிருக்கவேண்டும் .அரைகுறையாய் வாசிக்க தொடங்கிய காலங்களில் ( இப்ப மட்டும் ??? ) எழுத்தின் கிளர்ச்சியில் புணரும் வேட்கையொத்த எங்கேனும் பகிர்ந்து தீர்க்க வாய்க்கும் மனம் அவரானது .இந்த நேர்கையில் வறுமைக்கு பண்டமாற்றாய் மதமளிக்கும் பறங்கிய மதவியாபாரிகள் போல் என்னுள் அருட்பா திணிக்கும் சாமர்த்தியம் மெச்சத்தக்கது.பொதுவில் விடய அரட்டை தருணங்களில் எதிர்வாதம் செய்ய எவ்வொருவரையும் அவ்வளவு எளிதில் என்னால் ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை . இவ்விடயத்தில் நான் நேசிக்கும் முட்டாள் தனம் மிகும் மனிதர் நிற்க.
தனிமைக் கொடும்முயக்கம் பெற்று உப்புத் தென்றலில் மரத்த உடலோடு கடலோடியாய் சிதைமாறிய பின் வீடு திரும்பும் நாட்களிலும் தனிமையோடான விபச்சாரத்திற்கென்றே அலையத்தொடங்கி வறண்ட நன்செய் நிலங்களில் பித்தொடு திறியும்தருணங்களிலெல்லாம் அவரைக்காண நேரும் தரை மேயும் மாட்டின் தும்போடு அதே பாசுரங்கள் ,மனனம் இத்தியாதி இத்யாதிகள்.
எம் .ஏ தமிழ் படித்து தலைமையாசிரியராய் ஓய்வு பெற்ற பகட்டு வேடம் பூணா அக்குழந்தைமை குணாதிசயத்திற்கென்றே மனைவி அமைந்தது :((
அம்மாவும் (அம்மாக்களின்) பழைய வருத்த சுய புராணங்களின் ஊடே சொல்லியிருக்கிறாள் ருத்ராபதி ஆசிரியரின் இளமைகால துன்பியல் நிகழ்வுகளை.
குரூரமும் ,கயமையும்,வேசித்தனமும் மிகும் எதையோ விழாமல் பற்றிகொள்ளும் பிரயத்தனமாய் இறுக்கமான யதார்த்தவாதிகளின் கேலிப்புன்னகை அதியதார்த்த அப்பித்து நிலை மனிதன் மீது வீசப்படும் நிகழ்வுகளில் நினைத்து கொள்கிறேன் எனக்கான இப்போன்ற கேலிச்சிரிப்பு உங்கள் உதடுகளில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கவேண்டுமென்று அந்நாளுக்கான கொண்டாட்டங்களை சேமித்தபடி.
அவரின் இடுகாட்டு பயணத்திற்கான ஒரு தோள் எனக்கானது சுடுகாட்டு சாம்பல் பொட்டலில் இறக்குகையில் தோளோடு சேர்த்து வலித்தது. ச்சே!இந்த பாழாய் போன கண்ணீர் சொட்டேனும் வரமறுக்கிறது...
இனி யாளியின் நாவை வெண்கலத்தில் கொண்ட ஆலயமணியதிர்வு நினைவுறுத்தும் அப்பரையும் ,பட்டரையும்
வள்ளலாரையும் அவ்வாசிரியக்குரலோடு !!!!!