கடலின் காதலன்
Thursday, December 31, 2009
பையித்தியக்காரனிடமிருந்து.......................
கடற்சருமம் தடிக்க
இயந்திர மிருகங்கள் அலையும்
பரப்பில் தனிமையில் அழ சிரிக்கும்
பையித்தியக்காரனிடமிருந்து......................
முதல் முத்தம் !!!!!!
புவியியலின் தொலைவை சுழியமாக்கும்
எழுத்திற்கு .
...............................................
சட்டென்று செவிப்பறை தடவும்
விரும்பிய இசையோ ....
முதன்முறை கைகோர்க்கும்
காதல் தருணமோ ஒத்தது
நேசம் பெருகும் நட்பின் பிணைப்பு
நேசத்திற்கு பதிலென்ன????!!!!
??
புத்தாண்டு வாழ்த்துகள் சொந்தங்களே
மறக்கவியலா ப்ரியங்களுடன்
பாலா
Sunday, December 27, 2009
வெற்றிடம் ????
நாளெண்ணி கூடியும் நிறையவில்லை
கள்ளியின் தாய்மை திரவம் ஊறிக்கிடக்கும்
அகப்பையின் வெற்றிடம் .
உயிரணுவின் ஒற்றை தலைப்பிரட்டைக்கு
இடமளிக்கா ஓடுடை மலடு இருந்தென்ன????
பச்சிளமிதழ் தீண்டவியலா தனங்களை அறுத்தெறியலாம் .....
உதிரம் கசி நாட்களின் துடித்தல் எட்டவில்லை
மரத்த உடலின் வலிஉணர் பகுதிக்கு .
மருத்துவஞானம் கரைத்து கொண்டிருக்கும்
நாட்களோடு பணப்பையை.
நீர்தீற்றிய விழியோர பின்னிரவில் துழாவுமவன்
தாய்க்கரத்துள் குழந்தையாய் நிறைகிறேன்
நிறையாத வயிற்றுக்காரி.......................
புலம்பல்கள் :
* தலைப்பு தெரிவு செய்த தோழமைக்கு இவ்விடம் நன்றி ...........
* உரையாடல் போட்டிக்கென்று எழுதி சிலபல சிக்கல்களினால் அனுப்பவியலாத நிலைமைஎனக்கு நானே சொல்லிக்கொண்டேன் ......பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் என்று ...
Wednesday, December 23, 2009
ஒரு எதிர் வினை அல்லது சுய புலம்பல்
சர்ப்ப பற்களின் தடமொன்று
போதுமானதாய் இருக்கிறது
தனிமையில் அழவும்; பித்துவெறி
மிக சிரிக்கவும் .
-௦௦
.
மூடிய தழும்பினுள்
பதப்பட்ட இறைச்சியாய்
ரணம்
தயவுசெய்து ஆயுதங்களுக்கு
சொல்வேடம் பூட்டி அனுப்பாதே
கிழிபட நான் தயார் !!
உள்ளிருக்கும் உயிரிக்கு
ஆயுதங்காணும் லேசர்
கண்கள் இல்லை ..............
Monday, December 21, 2009
மரணஅமுதம்
அறுந்த மின்குமிழ்விளக்கின்
டங்க்ஸ்டனாய் துடிக்கிறேன் .
நரம்பின் திசுக்களில் விரிவடைந்த
இணையத் தொடர்பாய் வலி
சமிக்ஞை பரிமாற்றம் .
பிரசவ வேதனை .
பனிக்குடம் உடைந்த குறியினின்று
ஈன்றெடுத்தேன் ஒற்றைக் கண்ணீர்த்துளியை .
.
இப்போதைய என் தேவை
1. அவள் மடி
2. காமம் கழித்த ஒரேமுத்தம்
மரணம் = அமுதம்
Saturday, November 28, 2009
வளிமம்
அறை அபிஷேகிக்கும் மின்னிறகு
துண்டாடிய காற்றுடல் .
.
முடிவிலியில் ஆரத்தழுவியும்
இதற்தின்றும் தீரவில்லை
காற்றின் தாய்பசி .
.
இனவிருத்திக்கும் முயக்கவீச்சில்
இறந்த எதிர்பாலொத்து
பச்சைய உடலங்கள் கொலைத்த
கடல் முகிழ் வெற்றிடந்தேடும்
ராட்சத சுவாசம் .
.
மொழிஞன் பிரசவிக்கும் சொற்களாய்
வனமடைந்து திரும்பும் வாசவளி .
.
"வளியிடை போழப்படா முயக்கு "(வள்ளுவம் )
தேடுமவள்
உடைஎரிக்கும் துணையற்ற
பின்னிரவின் நாசி நவில்
கரியமில வளிமம் .
Sunday, November 1, 2009
வெயில்
நிலவிலங்கின் வாய்ப்பிளந்த
குறிகளுக்குள் துழாவுகின்றன
சூர்ய நாவுகள்
.
இலையுதிர்த்து அழுது
யாசிக்கின்றன வானுலோபியை
வறண்ட பின்னும் தரை உறிஞ்சும்
முதலிய(ம்) மரங்கள்
.
தவிட்டின் வர்ணக் குருவிகள்
என்பற்ற புழுக்கள் தேடி
புண்படுகின்றன மரவேர்கள் .
.
வாகனக்கண்கள் புசிக்கப்
- பெறும் தார்ச்சாலையின்
காட்சிமயக்க நீர்மம் .
.
காய்ந்து வெடித்த அவளுதடுகண்டு
சபிக்கிறான் அம்பிகாபதி வழி
வந்தவன் .
.
உழவப்பாட்டன் தோல் நக்கிய
வெக்கை வளிமம் உமிழ் நெற்றி
வியர்வை உண்டபின் துடிக்கிறது
நிலக்குறி ..... ஆண்மையற்ற
வெண்மேகம் கண்டு .......................
Tuesday, October 27, 2009
கடை காய்கிறது ????????????
அமுத போதை விட இன்பம்
சரிவிகித கலவையில் புகட்டப்
பெறுதல் செல்லிடைப் பிணைப்பில் !!
.
ஒரு சொல் ஒரே சொல் !!
கோடிகளில் கொலையவும்
உயிர்த்தெழவும் !!!!
.
மொழிஊனம் ! நீ நவில்
உணர்ச்சி பாஷை
ஒரு சொல் ஒரே சொல்லில் !!!
.
சுவாசத்துளை துணையில்
கிசுகிசுக்கும்
உன் வார்த்தை என் பெயர்
மதுவுண்ட புரவியொத்து
தறிகெட்டு விரைகிறது
குருதி வழங்கி !!!!!!!!!!
.
வண்ணப்பூச்சிகள் சூழ்
மலரிதழ் எஸ்ஸன்ஸ் கமழ்
ஸ்படிகக்கற் சமை பிரபஞ்ச
கடவுச்சொல் யாசித்தலின்றி
கையளித்தவள்!!!
.
முட்டையழி விடாய் நாட்கள்
அடிவயிற்றின் துடித்தலுக்கு
ஒத்தடமிட வலுவில்லை
என்னுதட்டிற்கும் வார்த்தைப்பிண்டங்களுக்கும்
.
உன்னிடம் இன்பத்தை (மட்டுமே ) யாசிக்கும்
ஆண்மையின் பிச்சைக்கரங்கள்
கு.கு .
கடை காய்ந்து கொண்டிருந்த காரணத்தால் இந்த ஒரு மொக்கைத்தனமான
பதிவை இறக்கி வைக்க வேண்டிய கட்டாயம் .மக்கா மன்னிச்சிக்குங்க ................
Tuesday, October 20, 2009
யாசித்த கரக்காரி !!!!!!
குருதியிற் விளை பூச்செண்டு
பரிசளித்தும் பரிகசிக்கிறாள்
வேர்களின் நுனியிலென் இரத்தத்துளிகளை
உணராதவள் .காகிதமலரென.
.
பழங்கூரை ஈர்க்கின் நுனிதிரளும்
மேகமழலையை கைதட்டும் லாவகமுனக்கு
என் ரத்த அடர்த்தி கண்ணுமிழ்நீர் .
.
உன் ஹெம்லேக் மௌனவிடம்
என் சொற்சிசுவிற்கு புகட்டப்படுகிறது
பழைய மருத்துவக்கிழத்தியின்
கைப்பக்குவத்தோடு .....
.
நிராகரிப்பின் சூட்டுகோல் பட்டும்
நா வியர்க்கும் மிருகமென
மூன்றெழுத்து பெயரை
சுற்றுகிறது அருவமொன்று ..
.
உடற் கழன்ற பிராணனொன்று
துடிக்கிறது .....
இறந்தகுட்டியை மூக்கால்
அசைத்துணர்ந்து ஓலமிடும்
நாய்போல் .
.
பழைய ஒருத்தியின் யாசித்த
உள்ளங்கரம் முத்தமிட்டு அழவேண்டும்
எங்கே அவள் ???????????
குறிப்பு :
கொஞ்சம் தரம் குறைவாய் இருப்பின் பெருமக்கள் மன்னிக்க ....................
Friday, October 16, 2009
பேச்சிலர் டிகிரி- 4
வள்ளுவப்பேராண்மை இகழ்தலுக்காட்படும்
பிரம்மச்சர்யம் புசித்தவென் நிசிகள் .
பூமிதி விழாவின் தணல் துண்டங்களை
தளர்த்தி சென்றிருக்கிறாள் கனவுப்
பெண்ணொருத்தி உள்ளும் புறமும் .
முறுக்கேற்றப்பட்ட வீணை நரம்புகள்
சரணம் வாசிக்கும் வாய்ப்பற்றவை (?)
சதைப்புசிக்கும் மிருகத்தின் வளர்தல்
பாக்டீரியப் பெருக்கத்திற்கான தட்பம்
என் உடல் .
கனவினைக் கொலைத்துமதன் உழவுச்சேற்றில்
மிருகத்தின் கால்தடம் .
வாய்ப்பின் வழியடைத்த இரவில்
தற்கலந்தழியவும் தேவையாய்
கனவுப் பெண்ணுடல் ..................
குறிப்பு :
மேற்கண்ட கிறுக்கல் என்பது "முட்டை போண்டா "போன்றது முட்டைப்பொரியல் விரும்புபவர்கள் "நேசன் " கடைக்கு செல்லவும் .
நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் .
பாலா
Tuesday, October 6, 2009
மாமனுக்கு (சில தலைவலிகளும் என் புலம்பல்களும் )
இப்போதும் நீ வளைந்து கொடுத்தாயா இல்லை நானே ஏறிக்கொண்டேனா என்ற குழப்பம் .
இப்போதெல்லாம் நீ குழப்பி அடித்திருக்கும் வண்ணச் சேற்றுக்குள் சிக்கிக்கொள் என்றே காலை நனைக்கிறேன் ..
சுயிங்கம் மெல்லும் ருசியானது உன் கவிதை அசைபோட்டு சாறு எடுத்தபின்னும் இருக்கும் சுயிங்கத்தின் அழுத்தம் உன் வார்த்தைக்குவியல் . சில கவிதைகளில் நிகழும் அர்த்தப்புரிதலுக்கு பின் சொல் மீதான அலட்சியம் நேர மறுக்கிறதுன் கவிதை -களில்
இப்போதொரு புதிய தலை வலி இது
சூரியனுக்கு ஒட்டிய கருஞ்சுருள்
ஆடி மீது நகரும்
ஆயிரம் கால் ரேடியச் சிலந்தி
நெய்தபடி நகர்கிறது நிழல் வலை
ஞாபக வலையை இப்படி காட்சிப்படுத்த இயலுமா என்ற கேள்வியை எழுப்பிடும் வேலையை அழகாக செய்கிறது இந்த வரிகள் .
( விலாங்கை பிடித்து விடலாம் போல . நீர் சொல்லரவாரத புரியரதுக்குள்ள )
டிராகன் நாவுகள் சூழ ஓட்டகமுடித் தூரிகையில்
எழுதிய சிறகுள்ள அதி மானுடப் பெண்
தைலமிட்டு வைத்திருக்கிறாள் காயத்தின் உதிரத்தை
நிறம் மாறாமல்
நினைவுகளின் நிர்வாணம் ,ரணம் .
நதி தளர்த்தியிருக்கும் மணல் வெளி
அந்தியின் வெம்மை அடைகாக்கிறது
கரிக்கும் அதிகாலை உதட்டில் மற்றும்சிமிழ் சுடரில்
நெகிழ்ந்த புடவையின் வழி அரைகுறையாய் கட்சிக்கு புலப்படும் மார்பக ஆரம்பத்தின் அழகு போல் தெரிகிறது நீ எழுதியிருக்கும் "நதி தளர்த்தியிருக்கும் மணல் வெளி "
வெம்மையை அடை காக்கும் விழி நீர் பூசிய உதடு சொல்கிறது உன் வலியின் எடையை
ஒரு மிடறுக் கடல் உமிழும் எரிமலை
வாய் முன்னம் ஒற்றை முகில்
கார் வானமாய் விரிந்த கண்
நான் மிரண்டு போனது இங்கேதான் "ஒரு மிடறுக் கடல் உமிழும் எரிமலை
கண்ணீரின் அடர்த்தி கடலுக்கு ஒப்பானதே . ஒத்துக்கொண்டே ஆக வேண்டும் .
கண்ணை இப்படியெல்லாம்(ஒரு மிடறுக் கடல் உமிழும் எரிமலை ) சொல்ல முடியுமான்னு அரண்டே போனது இங்கேதான் அதிலும் " எரிமலை வாய் முன்னம் ஒற்றை முகில் "
அங்கயே விழுந்துட்டேன் . இமையை இப்படிலாம் சொல்ல முடியுமான்னு .
மார்புக் கூட்டு மரங்கொத்தி
சப்தம் கொல்ல கொல்ல உயிர்த்தெழும்
மரணத்தின் காலடி
அரிவாள் கருக்கு கொண்டு இதயத்தை கூறுபோட்டும் தீரவில்லை ரணத்தின் பசி .
திசை தீர வெடித்தெறிந்த தசைத்துண்டு கனவு
கடல்கோள் பிரேதத்தின் மீன்தின்றமீதத்தை
பகிர்கின்றன நகம் போல் அலகுள்ள பறவைகள்
என் உணர்ச்சியை காட்சிப்படுத்தும் வித்தை கைவரவில்லை மாம்ஸ் ஆனால் இந்த வரிகள் கிளப்பும் அதிர்வு மட்டும் இப்போதைக்கு அடங்கப்போவதில்லை எனக்கு .
(வார்த்தைகளை கழித்து வலியை மட்டும் பிரித்தெடுக்கும் சூத்திரம் கற்கவேண்டும் உன் கவிதைக்காக )
இதுவரையிலான மேலே உள்ளது எனக்கான புரிதல்கள் மட்டுமே படைப்பாளியின் கோணம்
என்னவென்று தெரிந்திருக்க எனக்கு சாத்தியமில்லை .
(என்னதப்புனு மாமாதேன் சொல்லணும் )
Friday, October 2, 2009
பருவநிலையறிக்கை
இறந்த காலம்
வியர்த்த நுதலுடன் மஞ்சள்
மணக்கும் மடி புதைய
ஈரத்தலைகலைக்குமுன் விரல்
.
.
நிகழ்ந்து போன இறந்த காலம்
முகிழ்த்த முகமயிரும் ,ஊறிய
ஆண்மையும் தொலைதேசச்
சொந்தமாக்கினவுன் மடியை
.
.
நிகழ்காலம்
அறிவின் வாள் ப்ரியத்தின்
துடிதுடிப்பைக் கூறு போடும்
சொற்கொடூரம் நிகழ்த்துகிறேன்
பின்னோக்கிய மனித பரிணாமத்தில்
குரைக்கும் மிருகப்படிநிலையில்
நின்றபடியுன்னிடம் ...
.
.
நிகழவிரும்பா எதிர்காலம்
உணராததை உண்டு ; முயங்கிய
பஞ்சனை போதையில் !!
எதிர்வினை மறுத்த உனதன்பென்னால்
பனைக்கழுவில் ஏற்றும் உற்சவப்
பெருவிழா நடத்தப்பெறலாம் !!
தங்கமுலை தந்தவளே
தயாராய் இரு அதுவரையில் !!!!!!!
Wednesday, September 30, 2009
நீர்த்தஇரவுகள்
நீர்த்துக்கிடக்கிறது நம்
பரண் இரவுகளின் தொகுப்பு .
குசலவிசாரிப்புகள் ,சிறுஎள்ளல்
உண்டுகளைத்தாயா ?,நள்ளிரவு
காலைவணக்கம் .
சத்தற்ற பிதற்றல்கள் மின்னரட்டைப் பிணைப்பில் .
எட்டித்தெளிய முடிமின் சிரம் நுழைத்திருப்போம்
உன்னுள்ளும் என்னுள்ளும் !!!!
எத்தனை உருகி எழுதி கிழித்ததென்ன ?
இந்தாடா உதட்டுச்சாய முத்தமென
தவறியேனும் விழமறுக்கிறதுவுன்
எச்சிற் பூசிய சொற் பிண்டம் .
காகித சிறைக்குள் செந்தூரம்
சிவந்து போகிறது ஓரங்களை
*****???காதல் ????!!!!!
அச்சத்தின் மூலப்பிடியில்
சிக்கித்தவிக்கின்றன
இரத்தமிறைக்கும் இயந்திர
நாளங்கள் !!
இனி எந்நொடியும் சாத்தியமில்லை.
உன்னுள்ளானவென் பிம்பத்தை அழி
என்னுள்ளும் கொன்றேவிடுகிறேனுனை .
வா கை சேர்
மறுகட்டமைப்போம்
புதிதாயுன் பேர் சொல் !
இம்முறை சென்றேயாகவேண்டும்
மானிதரற்ற மலர்சமைந்த
பிரபஞ்சத்துள் !!
Sunday, September 27, 2009
பேச்சிலர் டிகிரி - 3
சாமத்தின் யாகத்தில் ஹவிசை
நான் .
யாக்கையை தின்று கொழுக்கின்றன
பாஸ்பரத்தின் தாயாதி மழலைகள் .!!
தோள் தினவு வெற்றாய் அழிகிறது
தலை சாயும் உற்றவளின்றி !.
கால் நூற்றாண்டாய் பெருந்தவம்
படர் முல்லைக் கொடியற்ற
ஒற்றைக்கொழு .
தசை நார் கிழிபடுகிறது
துருவக்கரடி கையிடை
மச்சம் .
விடியலில் சிரத்தீ கொண்ட
மெழுகு தற்கொன்றிருந்தது!!!..
*************************************************************
பந்தி :
மேலே படித்தது மெயின் டிஷ் (நான்வெஜ் .முட்டையில செஞ்ச கேக் மாதிரி ) அசைவம் சாப்பிடாதவர்கள் கீழே சமோசா + டீ இருக்கிறது எடுத்துக்கொள்ளவும் .எப்படி இருந்தாலும் ஏதாவது சாப்பிட்டுதான் போகணும்
ஏன்னா ? விருந்தோம்பல் தமிழன் பண்பாடாச்சே :)))))
*************************************************************
தவறியோ ;தவறட்டுமென்றோ
நீ
சிதறிவிடும் எழுத்துகூட்டங்களில்
தொலைந்துவிடுகிறது
உணர்ச்சி கூட்டில் சிக்கிக்கிடக்கும்
ராட்சத பறவை .!!
************************************************************
தவறாது மொய் எழுதிவிட்டுச்செல்லவும்.:))))
பாலா
Thursday, September 24, 2009
குடைக்குள் மழை !!???
தென்னை ஈர்க்கின் நுனி திரண்டு
மழை மறுபிறப்பெடுக்கும்
ஈரநாளில் ;
உன்னின் நானும் ;நானெனப்படும்
உன்னின் எனக்கான நீயும் .
.
..
விரல்களின் கலவியிலுதித்த
செஞ்சூட்டு குழவியொன்று
பருகிக்கொண்டிருக்கிறது இதயத்தின்
காதற் தாய்மையை .
..
உன்னாலவென் தருணங்கள்
வார்த்தைகளில் வர்ணத்தையும்
வாசனையையும் பீச்சியடிப்பதை
(அறிவாயா நீ ?(டீ))
..
ஒற்றைக்குடைக்குள் மௌனத்தோடு
ஒழுகுகிறது காதற் பெயருற்றும்
பெயரிடப்படாவொன்று!!!!!
சட்டென்று பொழிந்து விடுகிறது
ஒற்றை வெம்மழை உதடுகளினிடுக்கில்
திறந்த கதவின் வழி சட்டென்று
உடற்கலவும் பதனவறை காற்றைப்போல ..
..
கண்டும் காணா தோழியைப்போல்
ஓடிக்கொண்டிருக்கிறது
வெட்கிச்சிவந்து செம்மழையாய் ..
குறுகுறிப்பு .
இது மழையை காதலிக்கும் "மழைக்கு ஒதுங்கியவருக்காக "
மழை ??!!!
மழை ... இதன் மீது எனக்கு காதலோ ,விருப்பமோ , ரசனையோ இதுவரை
வந்ததாய் இல்லை .இதன் அவசியம் பொருட்டே வலுவில் ஏற்று கொண்டிருக்கிறேனென்றே நினைக்கிறேன் .ரோஜா வர்ணத்தின் மீது காதலிருந்தும் வன்மயாய் கறுப்பை ஏற்று கொண்டதைப்போல .
என்றேனும் ஒருநாள் இந்த மண்புணரியை இதே குடைக்குள்ளோ அல்லது
ஒற்றை இருக்கையில் எவளோ அவளுடன் சாளரக்கம்பிகளிடுக்கின் வழி மண் புணர்தலை காதலிக்க தொடங்கலாம் அப்போது இந்த கிறுக்கல்களின் அவசியம் நேரலாம்
Wednesday, September 16, 2009
ஊடற்பெருநிறை
நிசி நுனி வளர் பொழுதில் .
மேல்தட்டு மண்ணகழ்ந்தோடியபுழுவின்
வழித்தடமாய் வெடிப்புகளால்
நிரம்புகிறது .
வீட்டுள் வீடுகட்டும்
மஞ்சள் குளவியின் பிருஷ்ட
கொடுக்கு விஷம் தின்ற
புழுவென நிறம் மாறுகிறது
இதயம் .
வன்முயக்க குரூர திருப்தி
ஊடற் பெருநிறையையுன் மேல்
கவிழ்த்ததன் .
வன்மம் தொலைந்த பின்னொரு நொடியில்
அழத்தொடங்குகிறேன் யார்க்கும்
கேட்டிராவண்ணம்....
Friday, September 11, 2009
அழகியல்
மஞ்சள் அலகு நீலப்பறைவையொன்று
ஜன்னலோர புங்கையின் கிளையில்
உன் அழகைத்தின்ற படி !!!......
நாம் விட்டகர்ந்த
சொர்ண புஷ்ப மரத்தடியில்
காம்பு கழன்ற புஷ்பங்கள் சில
சிதறிய முத்தத்தை
தின்று முடித்திருந்தன!!!!!!!!!!!!!!.....
உன் முல்லைப்பூ
நிறப்புடவையுன் மாம்பழ
வர்ண அழகை சொட்டியபடி
கொடியில்!!!!!!!!!!!!.........
நொடிகளைக்கொட்டும்
படுக்கையறை மணிகாட்டி
நம்மின்(????) மணித்துளிகளை
முடிவிலியால் பெருக்கி
எண்ணியபடி !!!!!!!!!!!!.......
நாம் சொல்லிக்கொள்ளாத
காதலென்ற வார்த்தை
வீட்டு வெள்ளைப் பூச்சு
சுவர்களில் மோதி
சிதறியபடி !!!!!!!!!!!!!!...........
முதல் முறையாய்
மடி புதையும் சிசு
முதல் வாய்ப்பருகல்
சிலிர்க்கும் ஸ்பரிசம்
கர்வப்பெருமை உனக்கு
மார்க்காம்புகள் முளைக்க
வரம் வேண்டியபடி நான்
எங்கிருந்தோ வந்த
தேவப்பறவைகள் உன்
தலையில் தாய்மை எழிலை
கவிழ்க்க !!!!!!!!!!!!!!!....
மூன்று பக்க சிறுகதையை
கவிதைக்குள் அடைக்கும்
முயற்சி
வார்த்தைகளின் அடர்த்தி
உன் அழகு !!!!!!!!!!!!!!....
Monday, September 7, 2009
திமிரெழில்
நாவிற்கிடறும் பல்லிடுக்கின்
இறைச்சி துண்டு பிசிறோ ??
பல்லிடைப்பட்டோ ; வெட்டப்பட்டோ
நுனியறுந்த நகக் கண்ணோர
எரிச்சல் ரத்த தீற்றலோ ??
உன் திமிரோடு ஒத்துபோவது ..
ஆயிரமாயிரமாய்
திமிரின் வெளிப்பாடாய்
ஏகோபித்தவுன் ஆதரவில் .
இருக்கிறேன் நானும்
திரிசங்கின் ஓரத்தில் !!
(என்றேனும் இடம் பெயரலாம் )
துணிச்சலை திமிராய்
குழம்பி னேனோ????
பார்வையில் ; அழைப்பில் ;
நிராகரிப்பில் ; செயலில்
துணிச்சல் தூக்கில் (!!)
திமிரும் அழகென வளர்சிதைந்து
போர்த்தியிருக்கிறதுன்மேல்
எதோ ஈர்ப்பில்
வைரமுத்துவை கடன் வாங்கி
"ரெட்டைத்திமிரே
நெஞ்சில் முட்டிக்கொல்லு "
என வாய்வரை வந்ததை
காலணியை கையிலேடுப்பாயாதலால் :(
மறக்காமல் மறந்து வைத்தேன்
காரணக்குறிப்பு :
திமிருக்கும் அழகுரு கொடுக்கும் அவளால் அவளுக்கே இது .
நேசமுடன்
பாலா
Sunday, August 9, 2009
பேச்சிலர் டிகிரி (பார்ட் டூ )
அண்டத்தின் நிசப்த இறகின்
மீட்டலால்மௌனம் நிரம்பிப்
பொங்கும் அறையில் மெல்லிய
கலங்கல்
வெப்பத்தென்றலைத் துப்பும்
மூன்றிறகு மின் விசிறி ,
மஞ்சள் எச்சில் உமிழும்
விடிவிளக்கு.
பூமிக்கருவின் சூர்ய நாவுகளை
மேற்சுவர் தரை தடவும்
மழையால் தணிக்க இயலுமா????
நிகழ்த்த முயன்று கொண்டிருக்கிறது
இயந்திர விசிறி !!!!!!!!
தீயை விழுங்கியவனை (அல்லது )
தீயால் விழுங்கப்பட்டவனை
எதிர்பாலற்ற தனிமை இரவின்
கொடுமைப்பிடி .
எரிகிறேன் உள்ளும் புறமும்
காதுமடலேறிய இரத்தமும்
காய்ந்த உதடுகளும் யாசிக்கின்றன
எதையோ என்னிடம் (!)
பிச்சையிட வழியற்றவனாய்
நான் .
இளமை மீட்டும் ராகத்திற்கு
வார்த்தை கோர்க்க இயலாமல்
கெஞ்சுகிறேன்
காலத்திடம்
என் இளமையை தின்றழி ,
இல்லையேல்
யாசிக்குமங்கங்களை முடமாக்கு ,
இயலாவிடில்
தயவு செய்து
எனைக்கொன்று விடு ............................
Monday, August 3, 2009
சொல்லாயுதங்கள்
மதிய எரிச்சல் .
ரௌத்ரம் முளைவிடும் சூழகம் .
வியாபிக்கும் வெப்பம் உள்ளும் புறமும் .
சிறு தூண்டலுக்கு காத்திருக்கும்
எரிவிளக்கா?!!
பசியோடுறுமும் மான்கண்ட
புலியா?!!
பிரசவிக்கும் முயற்சியில் எரிமலை
திரவக்குழம்புகளா?!!
எரிய, பாய ,வெடிக்க
ஆயத்த தருணம் .
ஆ ................................. வெடித்தேவிட்டது ........
பெயரிலி சொல்லாயுதங்கள்
பல்கூர்முனைகளும் , ரத்தம்
சுவைக்கும் நாவுகளும் கொண்டவை .
சமர்களத்தில் இருபுறமும்
ஆயுதப்பிரயோகம் .
இதய மேற்சுவரென்ன ?
உட்புறமென்ன?
கிழிந்து தொங்குகின்றன
இதயச்சதைகள்
ஆயுத நாவுகள் ரத்தம்
ருசித்து மடிந்து விழுகின்றன .
ரத்தத்தின் வீச்சமடிக்கும்
அறை முழுதும் நிரம்பி வழிகிறது
வன் மௌனம்
இரண்டொரு நாளிலந்த
"வன் மௌனம் " செத்தழியலாம்
பிறிதொரு நாளில் அவ்வாயுதங்கள்
உயிர்பெற்று மீண்டும்
இதயம் கிழிக்கலாம் ................................
பின் குறிப்பு .
ஒரு வாரம் முன்பு " மழைக்கு ஒதுங்கியவர் (பெண்கள் கல்லூரி பக்கம் ) கேட்டிருந்தார் திருவாரூரில் வெயில்காலமா வென்று .ரெண்டொரு நாளில் ஊருக்கு வந்தபின்தான் தெரிந்தது இப்போது நம்மூரில் அதிகம் இருப்பது வெயில் காலம் தானென்று . ஊருக்கு வந்த இரண்டாவது நாளே அம்மாவோடு சண்டை சாயந்தரமே சமாதானமாகி ஒரு வழியா முடிந்து விட்டது. இந்த கடல் காற்றும் ,கப்பல் தனிமையும் என் மேல் ஒரு மிருகத்தனமான பையித்தியகாரத்தனத்தை பூசிவைத்திருகிறது .இப்பொழுதே இப்படி என்றால் திருமணத்திற்கு பிறகு பஞ்சாயத்து வைக்கவேண்டி இருக்கும் போல( சாமி எல்லாம் தயாராஇருங்க) மேற்கண்ட கொலை வெறியில் மேற்மேற்கண்ட கவிதை மாதிரி ஒன்றை கிறுக்கித் தொலைத்தேன் .
Monday, July 20, 2009
தலைப்பற்றவன்
அவனைப்பார்த்ததுண்டா நீங்கள் ?
முப்பது,முப்பத்தைந்து வருடங்கள்
முன்பு அவன் பிறந்திருக்ககூடும் !
உங்கள் தெருவில் ,ஊரில்
நகரத்தில் எங்கேனும் .
.
அவனைப்பார்த்திருப்பீர் நீங்கள்
அவன்தானவனென்று உங்களுக்கு
தெரிய வாய்ப்பில்லை .
.
நினைவு படுத்தி பாருங்கள்
"பழுப்பு நிற பற்கள்
செம்படைந்த தலை மயிர்
உள்நோக்கி வளைந்த கால்கள்
தரங்கிய உடல் "
அடையாளம்
.
மனப்பிறழ்ந்தவன்
உணவேயவன் தேவை
உங்கள் படிமம்
அவன்மீது
.
அவன் கனவுகள்
உடற்,மனத்தேவைகள்
அறிய விருப்பமில்லை ,நேரமில்லை
உங்களுக்கு .
அவனை மனித வட்டத்தினின்று
தூக்கி எறிந்திருக்கலாம் . (இல்லை )
அவனை மறந்தே போயிருக்கலாம்
பாதகமில்லை !!
.
என்றேனும் அவசரகதி வாழ்வில்
ஒருநாளவன் இறந்து போயிருப்பான்
அன்றும் நேரமிருக்காது உங்களுக்கும் எனக்கும் .!!!!
ஆகையால் புறப்பட்டுவிட்டேன் இதோ
.
அவனிருக்கும் போதேயவனுக்கு அஞ்சலி செலுத்த
"ஒரு உச்"
"இயன்றால் இருதுளி கண்ணீர் "
முடிந்தால் நீங்களும் வரலாம் ..........
Tuesday, July 14, 2009
"ஜே .ஜே சில குறிப்புகளும் " சில குறிப்புகளும்
இராஜராஜன் திருமண மண்டபத்தில்(திருவாரூர் ) ஜனவரி மாத புத்தக கண்காட்சியில் இதோடு சேர்த்து "ஒரு புளியமரத்தின் கதை , ஸீரோ டிகிரி,சிவகாமியின் சபதமும் வாங்கினேன் .அவை பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் பகிரலாமென ......
ஜே ஜே சில குறிப்புகள் .
"ஜோசப் ஜேம்ஸ் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபது ஜனவரி ஐந்தாம் தேதி தனது முப்பத்து ஒன்பதாம் வயதில் ஆல்பெர் காம்யு விபத்தில் மாண்டதற்கு மறுநாள் இறந்தான் " இப்படி முதல் இரண்டு வரியிலேயே அவனைக் கொன்று போட்டு அத மேல் ஓடத் தொடங்குகிறது இந்த நாவல் அதனோடு ஓடியே ஆக வேண்டிய கட்டாயம் இல்லையேல் வேடிக்கை மட்டுமே பார்க்க இயலும் .
இப்படி சொன்னாலும் சில சமயம் எதோ ஒரு பக்கத்தை பிரித்து படிக்கும்போது மின்காந்த புலமென அப்படியே உள்ளிழுக்கும் தன்மை கொண்டதாயும் இருக்கிறது .
குறிப்புகள் என்றே சொல்வதால் வரிசைக்கிரமத்தை பார்க்க முடிவதில்லை
முதல் வரியில் இறந்தவன் நாவலின் இரண்டாம்பாகத்தின் முதல் வரியில் பிறக்கிறான் .இதெல்லாம் நாவலோடு ஓடியே ஜீரணித்து கொள்ளவேண்டியிருக்கிறது .
படித்துக்கொண்டிருக்கும் போதே வெளிவந்தது சுய மதிப்பீடுகளுக்குள் புகுந்து விடுகிறேன் காரணம் சுய மதிப்பீட்டிற்கான எண்ணங்களை புகுத்தி நம்மை வெளித்தள்ளிவிடுகிறது .
ஒரு பத்து ,பதினைந்து வரிகள் கொண்ட ஒரு பத்தி தோற்றுவிக்கும் எண்ணங்களும் பயணங்களும் விசாலமானவை .வார்த்தைகளில் சத்தும் , அடர்த்தியும் நிரம்பி வழிகிறது .
நாவல் முழுவதும் அவனை (ஜே.ஜே ) தூக்கி கொண்டாடியிருப்பது அழகாகவே ஒரு படைப்பாளியை கொண்டாடும் விதமும் அப்படியே .
.
நாவலிலிருந்து
"ஹோட்டேல் உரிமையாளருக்கும் பட்லர்களுக்கும் ஜே.ஜே மீது ஒரு தினுசான கவர்ச்சியும் அதிலிருந்து கிளர்ந்த அனுதாபமும் இருந்தன "மிக புத்திசாலியான பையித்தியம் " என்ற படிமமும் அவனைப்பற்றி நாளா வட்டத்தில் அவர்களிடம் உருவாகி இருந்தது ."
இரண்டாம் பாகத்தில் ஜே ஜே வின் டைரிக் குறிப்புகளாய் சொல்லப்படும் கிட்டத்தட்ட அறுபத்து ஐந்தும் தனித்தனி சிறுகதைகளாய் எழுதப்பட வேண்டியவை .
.
"நேற்று ஒரு கவிதையை மொழி பெயர்த்தேன் மூலத்தில் கனமாக இருந்தது என் தாய் மொழியில் கஞ்சித் தாள் மாதிரி பறக்க ஆரம்பித்து விட்டது .என்ன நேர்ந்தது அந்த கவிதைக்கு ? என் பாஷை அந்த கவிதையை என்ன செய்தது ? எந்த விதத்தில் அதை துன்புருத்திற்று ?"
இப்படி நீள்கிறது அந்த குறிப்பு
நாவலை முடித்தவுடன் ஜே ஜே இடம் ஆட்டோகிராப் வாங்கும் எண்ணம் மேலிடுவதை தடுக்க முடிவதில்லை .
இந்த நாவலை பதிவுலக நண்பர்கள் சிலருக்கு பரிந்துரை செய்தேன் யாரும் காதில் போட்டு கொண்டதாய் தெரியவில்லை .
மீண்டும் ஒருமுறை இதை படிக்க வேண்டுமென இருக்கிறேன் புதிதாய் எண்ணங்களும் வாசல்களும் கட்டாயம் திறக்கலாம் .
பி. கு
இந்த நாவலுக்கு பின்னரே தமிழிழும் , மலையாளத்திலும் (மொழி பெயர்ப்பு ) நவீன இலக்கியங்கள் வந்ததாய் சொல்லப்படுகிறது .
.
பிழை இருந்தால் பொறுத்தருள்க .
Tuesday, July 7, 2009
மழையும் நானும் அல்லது அவளும்
எனக்கும் மழைக்குமான தொடர்பை நினைத்து பார்கிறேன் .என் முதல் மழைத்தொடர்பு எங்கு துளிர் விட்டதென்று நினைவில்லை .ஆனால் அம்மா சொல்வாள் நான் பிறந்த அன்று நல்ல மழையாம் .நான் பிறந்து வீட்டிற்கு வந்த ஒரு வாரத்தில் வெட்டாறு உடைத்துக்கொண்டுவிட்டதாம் ஊரே திருவாரூர் பெரிய கோவிலிலும் , கரைவீரம் கோவிலிலும் தண்ணீர் வடியும் வரை இருந்ததாம் .பேச்சு சுவாரஸ்யத்தில் அவ்வப்போது என்னிடமே பலமுறை சொல்லியிருக்கிறாள் அதனால் தான் எனக்கு கங்கா என்று பெயர் வைத்தாளாம் .
எதிர் வீட்டு அசோக்கின் அம்மா வீட்டில் தண்ணீர் நின்ற அளவை தூணில் குறித்து வைத்திருப்பதாய்சொல்வாள் .அவரவர்க்கென சில ஆட்டோகிராப்பை மழையும் வெள்ளமும் போட்டு விட்டுதான் போயிருக்கிறது .
எந்த மழையும் என் மீது துப்பி விட்டுச்செல்லும் ஞாபகத்துண்டுகள் சில மழைநாள் சம்பவங்களே .
பத்து வருடங்களுக்கு முன்பென்று நினைவு கனமழை பெய்த ஒரு இரவில் சத்யாவும் , மகேந்திரனும் ஓடிப்போனதும் எப்படியோ தேடிப்பிடித்து ஒருவாரத்தில் கொண்டு வந்து பிரித்துவைத்ததும் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது .
இப்பொது அவன் பூ விற்று கொண்டிருக்கிறான் வேறு திருமணமாகி மூன்று குழந்தைகள்.அதற்கு முன்னமே சத்யாவுக்கு திருமணமானது அவளுக்கும் இப்பொது இரண்டு பெண் குழந்தைகள் நல்ல வேளை மகேந்திரன் சாயல் இல்லை .
எப்பொழுதென்று நினைவில்லை ஒரு நள்ளிரவு மழையில் மின்சாரம் நின்று விட்டிருந்தது . அதென்னமோ தெரியவில்லை மெல்லிய வெளிச்சத்தில் தான் தூக்கமே வந்து தொலைக்கிறது .விடிவிளக்கின்றி தூங்குவது ஒரு வித பயத்தையும் ,மூச்சுக்குழலை அடைத்து விட்டாற் போன்ற உணர்வையும் உண்டு பண்ணுவதை தடுக்க முடிவதே இல்லை .
பக்கத்தி படுத்துறங்கிய அம்மவைக்காணவில்லை . அம்மாவை அழைத்தபடி மெழுகு வர்த்தி எடுக்கும் நோக்கில் அடுப்பங்கரைக்கு போனேன் மெல்லியதாய் முனகலுடன் எதோ சப்தம் ,இருட்டிலும் எதோ அசைவுகள் . அரவம் கேட்டு அங்கிருந்து அம்மா அவசரமாய் புடவையை சரி செய்த படி எழுந்து வந்து எடுத்து கொடுத்தாள் . அதை ஏற்றி வைத்து விட்டு படுத்து கொண்டேன் சிறிது நேரத்திற் கெல்லாம் வந்தவள் படுத்துறங்கி விட்டாள். அந்த இரவு முழுவதும் நான் தூங்கவேஇல்லை .
மறு இரண்டு நாட்கள் அவளுடன் பேசாமலேயே இருந்தேன் . இப்போது நினைத்தால் சிரிப்பாய் வருகிறது . ஏனென்ற காரணமும் இப்போது , அப்போது சரி விளங்கியதாய் இல்லை ..
ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது
ஒரு மழையொழுகும் மாலையில் குடையெடுத்து செல்லாத தால் நனைந்து கொண்டே வர வேண்டியதாயிற்று ஐந்து மணிக்கெல்லாம் இருட்டியது போல் கரியை அப்பிக்கொண்டிருந்தது வானம் வரும் வழியில் சுடுகாட்டை தாண்டி ஒரு புளியமரத்தை கடந்து கொண்டிருந்தேன் எதிரே பார்வைக்கெட்டிய தூரத்திற்கப்பால் சட்டென்று ஒரு மின்னல் அதன் வாலைப்பிடித்துக் கொண்டே இடியும் தன் பங்குக்கு கத்தி விட்டிருந்த போது சுளீரென்று அடி வயிற்றில் ஒரு வலி , ஏதோ நழுவியது போல் . பல்லைக்கடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்
மறுநாள் அம்மாஎன் மாமா வீட்டிற்கு அனுப்பிவிட்டாள்
இன்னமும் சொல்லிக்கொண்டு தானிருக்கிறாள்
" குண்டு மணி அளவுக்கு கூட தங்கம் வாங்க வக்கிலாத பயலுவோ
ஓடன் பொறந்த வளுக்கு செய்யாம அப்புடி என்னத்த தான் வாரி கட்டிட்டு போவப்போரனுவலோ " என்று
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் போனவருடம் கல்லூரி மைதானத்தில் சிறு மழைக்கிடையே அவன் கொடுத்த முத்தம் இன்னம் இருக்கிறது என் உதட்டிடுக்கில் .
ஆனாலும் என் முதல் மழைக்கான நினைவு இப்பவும் என்னிடம் இல்லை .
பி .கு .
அமெச்சூர் த்தனமான இந்த பதிவை தயவு செய்து பொறுத்துக்குங்க சாமியோவ்
"அட இதுதான் அம்மேச்சூர் நு நினைக்கிறியா நீ எழுதுறது எல்லாமே அம்மேச்சூர் தனமாத்தான் இருக்கு என்று பின்னூட்டமிடுவோர் வரவேற்கபடுகிறார்கள் "
Friday, July 3, 2009
எதிர்நிலையிரவு
வழமையாய் அழைப்பு துளிர்க்கும்
முனை வழமையாய் இல்லை
தேவைக்கு இறைஞ்சியோ ,வன்செயலோ
அதற்கு தேவையாய் இல்லை
அதொரு எதிர் நிலையிரவு ஆதலின் !!!
.
.
கொழுவை நிலம் உழுதல் !
வண்ணப்பூச்சியை மலர் குடித்தல் !
விறகு தீயை எரித்தல் !
சாத்தியம் !! ம்ம் !!!!!!
அதொரு எதிர்நிலையிரவு ஆதலின் !
.
.
எதிர் முனையில் வளர்ந்து விட்ட அழைப்பிதளால்
எங்கும் எதிர் நிலை !
எதிலும் எதிர் நிலை !
நிலையும் எதிர் நிலை !
கட்டுடைப்பு
ஆதலின் அதொரு எதிர்நிலையிரவு !
.
.
ஆணாதிக்கம் தொடங்குமிடம்
இப்போது தலைகீழாய்
இங்கது உடையும் தருணம்
வேறெங்குமது உடைவதற்காய் அவசியமிராது
ஆதலின் அதொரு எதிர் நிலையிரவு !
.
.
அவளின் ஆதிக்கம் உச்சத்தில்
நான் பெண்மையை அணிந்திருந்தேன் ?!!!!!
அவளுக்கு மீசை முளைத்து விட்டிருந்தது ?!!!!
என் சிறந்த இரவுகளில் அதுவும் .
ஆதலின் அதொரு எதிர் நிலையிரவு ............
Thursday, June 18, 2009
ஹெர்பேரியம்
பேபேசி குடும்பத்தில் எத்தனை வகைகள் ?
.
சங்கு பூவும் , அவரையும் கைகால் பரப்பி
தொங்குகின்றன ஒன்பது வருடமாய் !!
.
அட்டையில் பென்சிலின் கோட்டில்
பிங்க் நிறத்தில் பார்டர்
ஹெர்பெரியமும் , பெயரும் .
.
கடைசி பக்கம் வாழைமொட்டின்
ஒற்றைப்பூ வாய்பிளந்து
மகரந்த நாவை நீட்டியபடி !!
.
நடுவில் ஆமணக்கின்
ஒற்றை இலை கைகாட்டி சிரித்தது !
.
ஒன்பதின் கீழ் பத்தென
மேலதின் தரத்தை கீழது சொன்னது
முதற் பக்க மதிப்பெண் !
.
.
சங்கீதா சொன்னாள்
"இதுவும் ஆட்டோகிராப் போல தான் அண்ணா "என்று
.
.
தாவரவியல் புத்தகத்தின் இடுக்கில்
உறங்கிகொண்டிருக்கிறது கருகிய ரோஜா ஒன்று !
RAJI எங்கே இருக்கிறாய் நீ ?????????????????
என் ஹெர்பேரிய அட்டையில்
"cliteriya terneshya " பச்சையாய் ...............................................
Saturday, May 23, 2009
பேச்சுலர் டிகிரி
ஏதோவொரு காட்சி பிழையின் தீவிரத்திலோ
தனிமையின் முயங்களிலோ
அதுவென்னுள் விழுந்து விட்டது போலும் !
(இதை அனுபவித்திருப்பீர் நீங்கள் )
என்னுள் தன் கிளைகளை
பரப்பி இருந்தது
என்புகள் நொறுங்கி
நரம்புகள் தெறித்துவிடும் போல் !
இழந்து கொண்டிருந்தேன்
அதனாளுமையின் வன்மையில்
வெட்கம் ,பசி இன்னபிற .....
எந்த முனிவனுக்கு தெரியும்
என் ஊசிமுனைத்தவ்ம் ??!!!!!
அங்கங்கள் வழி தீஒழுக
நின்றிருக்கிறானா அவன் ??!!!!
மார்பிலும் முகத்திலும்
மயிர்க்கால்களின் ஆளுமைக்கொண்ட
என்னால் கண்ணாலே
அழைக்கும் எவளுடனோ
அதை விட்டொழிக்க வழியிருந்தும்
கலாச்சார முட்கொம்பிலதை
கொன்று மாட்டி விட்டேன்
இனிமேலும் கொலைக்க
நான் தயாரில்லை
அடியே என்னவளே
எங்கிருந்தேனும் உடனே புறப்பட்டு வா !!
Sunday, May 17, 2009
தேர்டு மில்க் அகைன்
தினவெடுத்த தீநாக்கள்
திரண்டு தழலாய்
அந்த அறை மையத்தில்
பொங்கி வழிந்ததில்
இல்லாதது இருப்பு கொண்டு
இருப்பின் இல்லாததை
ஒன்றையொன்று நிரப்பும்
முயற்சியில் !
பூமியினின்று கழற்றி
கொண்ட அவ்வறை
கட்டற்ற வெப்ப உயர்தலில்
எரிந்து சாம்பலானது !
வெட்ட வெள்ளை வெளியில்
இயங்கியவற்றின்
முயற்சி தீவிரத்தில்
ஒன்று வென்றிருக்கையில்
மற்றொன்று தோல்வியின் விளிம்பில்
வெற்றியை ருசித்துக்கொண்டிருந்தது !!
நெருப்பு நீறு பூக்க
உறங்கத்தொடங்கியது !!...................................
Friday, May 8, 2009
தேடல்
அவளைக்காணவில்லை
முற்பகலில் தேடத்தொடங்கினேன்
வெக்கை
வெளியேயும் உள்ளேயும்
.
.
முன்னிரவிலும் கிட்ட வில்லை
காலத்துளிகள் இற்று உதிர்ந்து போயின !
பின்னிரவில் நெருப்பாய் தகிக்க
தொடங்கினேன் !!
.
.
கருக்கலில் அருகம்புல்லில்
அரும்பிய பனித்துளியொன்றில்
கண்டெடுத்தேன்
இதயத்துசெல்களை
பூக்களாய் புஷ்பிக்க செய்து
அர்ச்சிக்கத் தொடங்குகிறேன்
.
அவள் கால் சுண்டுவிரலால்
சீண்டப்பட்டு
சிரித்து விழுகின்றன அவை !!!
இதயம் செல் உற்பத்தியில்
சாதனை செய்யும் விதமாய்
உமிழத்தொடங்கியது
பூக்களை !!!!
.
எங்களை ஒதுக்கித்தள்ளி
ஓடிக்கொண்டிருக்கின்றது
காலவெளி
சிறு ஓடையென !
.
சட்டென்று நுகர்கிறேன்
அவளை
ஏதோ ஒன்று தூக்கி எறிகிறது
எனை !
அதொரு வெட்ட வெளி
அந்திமம்
ஏதேதோ வாசனைகள்
எண்ணப்பிதற்றல்கள்
இப்போழ்து
என்னைக்காணவில்லை !!!!!!!!!(?)..........................